Monday, July 11, 2011

சித்திரைத்திங்கள்....

சித்திரைத் திங்கள்.....

தமிழர் எங்களின் தமிழ் புத்தாண்டு

தமிழ் தமிழன் என்று தமிழ்த் தாயே

உன்னை ஏமாற்றி உன் புத்தாண்டை

மரபுகளையெல்லாம் மீறி யார் மாற்றினாலும்

சித்திரை திங்களே... தமிழ்த் தாயே......

எங்கள் மனதில் என்றும் நீ தானம்மா

சித்திரைத் தாயே உன் முதல் நாள் தான்

எங்களின் புத்தாண்டு தினம்......

பாட்டன் முப்பாட்டன் காலமாய்

வாழையடி வாழையாய்

நாங்கள் கொண்டடாடிய புத்தாண்டு

சித்திரைத் திங்கள் முதல் நாள் தான் - அதனை

தமிழ் தமிழன் என்று சொல்லி

அரசியல் பிழைப்புக்காய்

அரசியல் வியாபாரிகள்(தமிழ்) சிலர் சேர்ந்து

அரசாணைப் போட்டு புத்தாண்டு தினத்தை மாற்றினால்

மாறிடுமா நம் நாட்டின் மரபுகள்......

தமிழ் நாட்டின் மரபுகள்......

நாள்க்காட்டியில் வேண்டுமானால் மாற்றி விடலாம்- ஆனால்

மக்கள் மனங்களில் மாற்றமுடியுமா?

தமிழ் தமிழன் என்று சொல்லி பிழைப்பவர்கள்

தமிழ் புத்தாண்டு தினத்தை மாற்றியவர்கள்

தங்களின் பிறந்த நாளை மட்டும்

ஆங்கில மாதத்தை பின்பற்றி

வீதியெங்கும் விழா நடத்துகின்றனர்... கேட்டால்

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பார்கள்

அரசாணைகள் கூட அன்னியமொழியில் தான்

அலங்கரிக்கிறது நம் நாட்டில்.....

நம் நீதி மன்றங்களில் கூட வழக்காடும் மொழி

ஆங்கில மொழிதான் அலங்கரிக்கிறது ...

குப்பனுக்கும் சுப்பனுக்கும் புரிகின்ற தாய் மொழியை

புறந்தள்ளி விட்டு புறக்கணிக்கிறார்கள்

நம் தாய் மொழியை

சிரிப்புதான் வருகிறது................

என்று மாயும் இந்த மாய பற்று.......

என்று அழியும் இந்த மாயக் கூட்டம்

என்று எம் அன்னைத் தமிழ்

அரியணையேறிடுவாள்......

No comments:

Post a Comment

About Me

My photo
Chennai, Tamil Nadu, India
முக்கடலின் திருவேணி சங்கமும் அன்னை குமரிஅம்மனும் வீரத்துறவி விவேகானந்தரின் நினைவுமண்டபமும் பாரததாயின் பாதமுமான கன்னியாகுமரிமாவட்டத்தில் 12 சிவாலய ஆலயங்களில் 11 வது ஆலயமான திருப்பன்றிகோடு ஸ்ரீமாஹாதேவர் குடிகொண்ட மற்றும் பள்ளியாடி பழய பள்ளியப்பன் பள்ளிக்கொண்டுள்ள பள்ளியாடி எனும் ஊரில் மாதவன், கோமதி என்போருக்கு நான்காவது மகனாக பிறந்தவன். வயிற்றுப்பிழைப்புக்காய் வாழ்க்கையின் வசந்தங்களோடு கைகுலக்க வேண்டி சென்னை மாநகருக்கு புலம் பெயர்ந்தவன். வந்த இடத்தில் வாழ்க்கைத்தரம் வளர சென்னைமாநகரம் வாய்ப்பளித்தது.தனிமரமாக வாழ்ந்த நான் கடந்த 2007 மே மாதம் 27ம் தேதி என்னோடு துஷாரா எனும் பெயருடைய இன்னொரு இணை மரத்தையும் என் வாழ்க்கையில் இணைத்துக்கொண்டேன் எங்களின் இனிய இல்லறத்தால் தயனியா என்ற விழுதினை 2009 மார்ச் 14 ம் தேதி ஈன்றெடுத்தோம்.தற்போது சென்னையில் சூளைமேடு எனும் பகுதியில் சந்தோஷமாய் வாழ்ந்து வருகிறேன்....

Search This Blog

Followers